Saturday, April 1, 2017

சு.சிவா

 உலகப் பெருவெளியில் அடையாளங்களை இழந்து, சுயமிழந்து நாடற்றவர்களாய,; ஏதிலிகளாய் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளும், வலியின் அவலக்குரல்களும் கூட தனிமைப்படுத்தப்பட்டு சிறைபிடித்து அடைக்கப்கப்படுகிறது.  வலிமை மிக்கவர்களாக, உயிர்ப்பு நிறைந்தவர்களாக வாழ்ந்தவர்கள். உண்மையான முகம் சிதைந்து,  வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்வதற்க்கும், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கும் புலம்பெயர்ந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப  ஒரு போலியான முகத்திரையை அணிந்து, தனக்குள்ளேயே வசிக்கும் அவலம்.
           முகமிழந்து, அடையாளமிழந்து, பண்பாடு, காலச்சாரம், வாழ்க்கைநெறி, எதிர்காலக் கனவுகள், அத்தனையும் தனக்குள்ளே புதைத்து. புலம்பெயர்ந்த நாட்டில் அணிந்துகொண்ட முகத்திரையின் அடையாளமாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கொள்ளும்  இனத்தில், ஏதிலியாய் பிறந்து, ஏதிலியாய் வளர்ந்து, முகாம் வாழ்க்கையே பண்பாடாய், கலாச்சாரமாய் உள்வாங்கிக் கொள்ளும் இளைய தலைமுறையின் எதிர்காலம் என்னவாகும், 
       அகதி வாழ்க்கையில் தன்னையே இழந்து கொண்டிருக்கும் எம் இனத்திற்கு  அதன்  வலி புரியாமல் இல்லை, தங்கள் இழப்பை, வரலாற்றை, இழக்கை பதிவு செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் புரிதலின்மையால், தவறான கண்ணோட்டத்தால் புலம்பெயர்ந்த வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடுமோ என்னும் அச்சம்,  தன்னிலை உணர்த்த எடுக்கப்படும் முயற்சிகளையும் தடுக்கிறது. 
          இனப்படுகொலையிலிருந்தும், வன்கொடுமையிலிருந்தும் விலகியிருந்தாலும், ஈழத்தில் உறவுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் உயிர்ப்பிக்கும் உணர்வுரீதியான வெளிப்பாட்டினை, அகத்தில் அடக்கிவைக்கும்போது ஏற்படும் வலியை, மண்ணையும் மக்களையும் சுவாசித்து அகதியாய் அடையாளமிழந்து, தங்கள் இருப்பை பதிவுசெய்ய முடியாமல் வலியோடு வாழ்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். 

அகதி வாழ்க்கை
உயிருக்கும் உணவுக்கும்
நம்பிக்கை தருகிறது
எங்கள்
உணர்வுகளை தின்று. 

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் == பா.சுபானி


    இது ஒரு போலியான உலகம். மரபுகளாலும் மரபுசார்ந்த புனிதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட புனைவுகள் பெண்களின்  மனவலிமையை சுயவலிமையை மிகக் கொடுமையாக சிதைக்கிறது. பெண்ணுடல் வெளி ஆண் வன்முறைக்குப் பயிற்ச்சித்திடலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதி மோதல், இனமோதல், போர் இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது, பழிதீர்க்கப்படுவது பெண்கள், அவர்களின் உடல்;. இது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை. ஆனால் சொந்தச் சமூகத்திற்குள்ளேயே, தாங்கள் முழுமையாக நம்பும் மனிதர்களாலேயே பெண்கள் சீரழிக்கப் படுவது, சிதைக்கப் படுவது எவ்வளவு பெரிய கொடுமை. 

ஈழப் போர்ச் சூழலில்  திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் இனவெறியின் கேவலாமான முகம். அதை எதிர்கிறோம். போராடுகிறோம்.  இன்று நாம் சார்ந்திருக்கும் அகதிச் சமூகச் சூழலிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், அவர்களைத் திசை மாற்றும் இரட்டை அர்த்தமுள்ள பேச்சுக்கள், காதல் என்னும் மாயைக்குள் இழுத்து  சீரழித்தல் போன்றவை முகாம் வாழ்க்கைக்குள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தாலும் அவை வெளித் தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது. காரணம் பெண் உடல் மீதான வன்முறையில் சமூகத்தின் பார்வையில் புரிதல் இல்லை, 
     வெளிக்கிளம்பும் பிரச்சனைகளை இழிவாகவும், கொச்சையாகவும் கதைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் கேவலமான நிலைக்குள் தள்ளுகிறது. மற்றவர்களின் வலியில் சுகம் காண்பது சிலருக்கு இயல்பாகிப் போனது.  பிரச்சனையின் ஆழமறியாமல் விளையாட்டாய் சுற்றி வளைத்துப் பலவகையானக் கோணங்களிலும் கதைத்து பெண்ணின் வாழ்வைச் சிக்கலாக்குகின்றனர். இதனால் மனத்தெளிவும், முதிர்ச்சியும் இல்லாத இளம் குமர்ப்பெண்கள் வாழ்வைப்பற்றிய கவனத்தில் தடுமாற்றம் அடைகிறார்கள்.  இதுவே  கயவர்களுக்கு உருதுணையாய் அமைகிறது. இதை  தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் அவர்களை நிரந்தரமாக தவறான பாதைக்குள் இழுத்துச் சென்றுவிடும் அபாயமும் நிகழ்கிறது.
          பெற்றோர்கள் பெண் குழந்தைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல், தொட்டுப் பழகுதல் போன்றவற்றில், இயல்பாகத் தொடுதலுக்கும் தவறாகத் தெடுதலுக்குமுள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள, கவனமாக இருக்க அவர்களுக்கு புரியும்படி தெளிவுபடுத்தல் வேண்டும். தவறான அனுகுமுறைகளுக்கு உடந்தையாகாமல் தங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெண் குழந்தைகளுக்குள் வர வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனதின் இளைப்பாரலுக்கும், மென்னையான கனவுகளுக்கும் பெற்றோர் துணையாக நின்றால், நம் குழந்தைகள் தான் நாளை சாதனைப் பெண்கள.;

இனவெறியின வன்கொடுமையிலிருந்து  நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அகதியாய் வந்தோம். இனி இனத்துரோகிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் எச்சரிக்கையாக இருப்போம்.