Monday, August 18, 2008

புலம்பெயர்ந்தோர் கவிதை

இளங்கவி ஈழபாரதியின்

புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பெரும்பாலும் ஈழம் சார்ந்து பேசப்பட்டு வந்தாலும் வாழ்வியல் தன்மைகளில் பொது நிலைகளையும் அரவணைத்தே வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் “ ஒரு சாலையின் சரிதம்” மனித வாழ்வின் துன்ப நிலைகளின் சரித்திரமாகவே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.“
தங்கச்சிக தலையெழுத்து
கரைசேரும் காலம் வரை
பூமியிலே நானொருத்தி
பூப்படைய வேணாமுங்க” !
இன்றைய காலகட்டத்தில் தொடரும் வரதட்சனை பிரச்சனைகளையும் வீட்டில் எல்லாம் பெண்குழந்தைகளாய் இருந்தால் ஏற்படும் வலி பிரசவ வலியை விட அதிகமானதுதான்.கவிஞர் பெண்ணியம் பற்றி மட்டும் அல்ல தலித்தியம் பற்றியும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
“எங்கள் ஊரில் இன்றுவரை
இரட்டைக் குவளை உண்டு
செருப்பணிந்த கால் மறுக்கும்
தெருக்கள் பல உண்டு
தீட்டுப்பட்ட மனிதன்
நுழையா திருக்கோயில்கள் உண்டு!”

இவ்வுலகில் மனிதராய் பிறக்கும் அனைவருமே உணவு உடை இருப்பிட் கல்வி இவைகளை நிறைவாகப் பெற்று வாழ உரிமை உண்டு என்று “இரண்டாம் வத்திக்கான் சங்கம்” நமக்கு பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அதே போன்று ஜ.நா. சபையும் அடிப்படை உரிமைகள் பற்றியும் மனித உரிமை மீதல்கள் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.
ஆலயங்களில் ஆண்டவணை வழிபடுவதற்குக் கூட சாதியின் பெயரால் தடை விதிக்கப்படுகின்றது. குறிப்பாக அரியனா மாநிலத்தில் பல்லாறுக்கு அருகிலுள்ள பத்ரம் என்ற கிராமத்தில் தலித் மக்களின் கோயில் ஒன்று உயர்சாதி அனத்தவர்களால் இடிக்கப்பட்டு உணவு கூட கொடுக்கப்படாமல் சித்திரவதைச் செய்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் கண்டதேவி தச்சூர் ஆரண்கண்டிகை போன்ற இடங்களில் தலித் மக்களுக்கு வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுமனித உரிமை மீறல்களின் உச்சம் எனலாம். இதைவிட கொடுமையானது இரட்டை குவளை முறை இன்னும் ஒரு சில இடங்களில் தொடர்வதுதான். கடலூர் மாவட்டத்தில் 16 கிராமங்களிலும் திண்டுக்கல் மாவட்த்தின் ஒரு சில இடங்களில் இன்னும் நடப்பில் உள்ளது. தந்தை பெரியாரின் போராட்டம் இன்னும் தொடர வேண்டியே உள்ளது.
உயர்சாதிப் பெண்ணை தலித இளைஞன் நேசித்தாலோ இல்லை தலித் இளைஞனை உயர்சாதிப் பெண் நேசித்தாலோ பாதிப்பு என்னவோ தலித் இளைஞனுக்குத்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டத்திற்கு மலம் திணிப்பது நிர்வாணமாக்குவது என்று இன்னும் தொடர்கிறது. சாதிய ரீதியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இந்த வலி கவிஞரின் கவிதையிலும் இப்படி….
“ காதலர்கள் வாயில்
மலத்தைத் திணிப்பதா
அல்லது
பெற்றவர்களை நிர்வாணமாக்கி
ஒடவிடுவதா
இல்லை இவர்களை
ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?
சாதியப்பாகுபாடுகள் தமிழகத்தில் தலைதூக்கி இருந்தாலும் ஈழம் மற்றும் தமிழகப் புலம்பெயர்வு மக்களை பொறுத்த வரையில் போராட்ட வாழ்வில் சாதியம் தொலைந்து போனாலும் முழுமையாக ஒழிந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது.
ஒரு கவிஞரின் கைக்கூ இப்படி விரிகிறது.
“கணிணி யுகத்திலும்
கல்யாணப் பேச்சில்
ஜாதி”
புலம்டிபெயர்ந்த மக்கள் மத்தில் சாதிய வேறுபாடுகள். இல்லை என்று கூறி விட முடியாது கல்யானப் பேச்சில் இருக்கத்தான் செய்கிறது. அதே வேளை ஈழத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தின் கிராமங்களில் தனிச் சமூகமாக வாழ்ந்தவர்கள் இங்கு ஒன்றாக கலந்து ஒரே சமூகமாக வாழ்வது இடம் பெயர்வின் நன்மைகள் என்றே கூறலாம்.
முனித உரிமை மீறலில் முதலிடம் வகிக்கும் நாடு “ இலங்கை” என்று தற்போது ஊலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து துன்பங்களையும் மனித உரிமை மீறல் என்றே குறிப்பிடலாம்.
ஊலக அகதிகளுக்கான ஜ. நா. சபையின் ஒப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து (ஒப்பந்தம்) இட்டு இருந்தால் மனித உரிமை மீறலுக்கான நிலைப்பாடு குறித்து உலக நாடுகளும் ஜ.நா.(அகதிகள் பிரிவு) சபையும் ஒருவேளை பேசியிருக்கலாம். போர்கால சூழல் காரணமாக புலம்பெயர்ந்த அகதிகளை தனது நாட்டுக் குடிமக்களுக்கு மேலாக பாதுகாக்க வேண்டும் என்பது ஜ.நா. சபையின் வேண்டுகோள் என்பதையும் இங்கு மறந்து விட முடியாது.
வலியோடு தொடர்வோம்

--------------------------------------------

No comments:

Post a Comment